Saturday 6 April 2013

இசைவிரும்பிகள் I-காலமும்கானமும்           

           இசை என்பது மாறிவரும் கலாச்சார நுட்பங்களை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அது சார்ந்த மண்ணின் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு மிக  வலிமையான  ரசனை. ஒரு நதி ஓடுவது போன்று  இயல்பான நிகழவேண்டிய மாற்றங்களுக்கு உட்பட்டு இசை தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது. ஒரு பண்பாட்டின் பலகூறுகளில் இசை மிக  மைய்யமானது. ஏனென்றால்  ஒவ்வொரு மனித சமூகமும் இசையால் சூழப்பட்டிருக்கிறது. ஓவியங்களும், சிற்பங்களும், கவிதைகளும், இலக்கியங்களும் இசை என்னும் இந்த ராட்சத ரசனையின் முன் பலமற்று போய்விடுகின்றன. ஒரு உடையோ, உணவோ, அல்லது மொழியோ ஒரு பண்பாட்டை மற்றவர்களுக்கு உடனே அடையாளம் காட்டுவதை போல இசை இயங்குகிறது.  எனவேதான் பேக் பைப்  ஸ்காட்லான்ட்டையும் , போங்  சீனாவையும், கிடார் ஸ்பெயினையும், சந்தூர் இரானையும், மாண்டலின் இத்தாலியையும்.போங்கோ ஆபிரிக்காவையும்,வீணை இந்தியாவையும் அந்த இசையை கேட்ட மாத்திரத்தில் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஒரு மனித குழுவின் எல்லாவித உணர்சிகளின் வெளிப்பாடாகவே இசை  நமக்கு அறிமுகம் ஆகிறது.
     ஒரு பண்பாட்டின் பிரதான முகமாக இருக்கும் இசையை  புரிந்து கொள்வது மிக முக்கியமானதாக இருந்தாலும்   இசையை புரிந்து கொள்வதைவிட  அதை ரசிப்பதே ஒரு நல்ல ரசனையாக இருக்க முடியும்.
 "எது நல்ல இசை?"
"நல்ல இசை என்பது  நான்  சிறுபிள்ளையாக இருந்த  போது  கேட்ட இசை."
 "எது மோசமான இசை?".
 "மோசமான இசை என் பிள்ளைகள்  கேட்கும் இசை."
           இப்படி  ஒரு நகைச்சுவைத் துணுக்கை நான் முன்பு  ஒரு புத்தகத்தில் படித்தேன். படிக்கும் போதே இதில் இருக்கும் பகடி (satire) என்னை  கூர்மையாகத் தாக்கியது. இது என்னை யோசிக்கத் தூண்டியது.
            உண்மையில் இது ஒரு மிக முரண்பாடான  சிந்தனையே. நாம் எல்லோருக்குமே இந்த மறந்துவிட்ட அல்லது மீண்டும் என்றுமே காண முடியாத  நம் சுவடுகளை தேடுவதில் சுகம் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இசையை நாம் ஆழமாக நேசிப்பதன் பின்புலத்தில் இதே நாஸ்டால்ஜியா ஒரு உயிர்கோடு போல இயங்குகிறது.  (நாஸ்டால்ஜியா என்ற வார்த்தையை மீட்க முடியாத பழமை என்று தமிழ் படுத்தலாம்).
       பொதுவாக ஒரு  பாடலில் இருப்பவை:  இசை, கவிதை, குரல். ஆனால் இவை மூன்றையும் தாண்டி இன்னொரு ஆளுமை பாடலை  முழுமையாக்குகிறது. அதுவே காலம். ஒவ்வொரு பாடலும் அது நிகழ்ந்த  அந்த காலத்தை தனக்குள்ளே புதைத்துகொண்டு, நம் காதுகளை எட்டும்போது, கடந்து போன அந்த பழமையை நமக்குள் உயிர்த்தெழ வைத்து,  கேட்பவனையும் அவன் இழந்துவிட்ட காலத்தையும் ஒரே கோட்டில் இணைக்கிறது.  காலம் என்ற மணலின் மீது நாம் விட்டுச்சென்ற காலடித்தடங்களை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவே நாம் பழைய கானங்களை கேட்க விருப்பம் கொள்கிறோம்.
        எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்க வரும்  பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பட பாடல்களை இசைக்க சொல்லி கேட்பது வழக்கம். நானும் அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன்.  அது அவர் கல்லூரி நாட்களில் பார்த்த படம். அதன் பாடல்களை கேட்கும் போது அந்த நாட்கள் மீண்டும் அருகே வருவது போன்ற ஒரு எண்ணம் அவருக்கு ஏற்படுவதை    அவர்  கண்களில் தெரியும் ஒருவித மயக்க நிலையை கொண்டே நான்  புரிந்து கொள்வதுண்டு.  இதை அவர் என்னிடம் ஒவ்வொரு முறையும்  சொல்லி " ஒரே பாட்டில இருபது வருஷம் பின்னால போயாச்சே "என்று களிப்புடன் சொல்வது உண்டு.குறிப்பாக வானிலே தேனிலா, கண்மணியே பேசு, பட்டுக்கன்னம்  என்ற காக்கி சட்டை பட பாடல்கள்தான் அவை.(ஒரு விஷயம்; அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர்). இதுதான் நாம்  நாம் சிறு வயதில் கேட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவதின் உளவியல்.

          "செந்தமிழ் தேன்  மொழியாள்", "தூங்காதே தம்பி தூங்காதே ", "அச்சம் என்பது மடமையடா ","மாசிலா உண்மை காதலே", "முல்லை மலர் மேல""பாட்டு பாடாவா","காலங்களில் அவள் வசந்தம்",  "நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால்" "பாடாத பாட்டெல்லாம்"  "அனுபவம்புதுமை", "நான்ஆணையிட்டால்" ,ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" ,"ஒரு  நாள் போதுமா?" "வீடுவரை உறவு", "அதிசய ராகம்","அன்னக்கிளி உன்ன தேடுதே","உறவுகள் தொடர்கதை", "காதல் ரோஜாவே" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் ரசிக்கப்படுவதன் ரகசியமும் இதே உளவியல்தான். ஒவ்வொரு தலைமுறை எழும்போதும் அதற்கு  முன் இருந்த இசையை பழையது என்று சொல்லி புதிய இசையை வரவேற்கும்   மனப்பாங்கு உலகம் முழுவதும் காணப்படும் ஒரு இயல்பான நிகழ்வே. "பழையவர்கள்" புதிய இசையை கேலியுடன் அசட்டை செய்வதும்  புதிய இசைக்கு உடனடி அங்கீகாரம் தர மறுப்பதும் எங்கும் நடக்கக்கூடியதே.
            ஆங்கில இசையின் பசுமை நாயகர்களாக இன்று மறு பேச்சின்றி ஏற்றுக்கொள்ளப்படும்  தி பீட்டில்ஸ் குழுவினரின் துவக்க காலங்களில் அவர்களின் இசை வெகுவாக விமர்சிக்கப்பட்டது. "ஒரு மலிவான சிறுவர்களின் இசை" என்று பெருமான்மையால் தீர்மானிக்கப்பட்டு பீட்டில்ஸ் அன்றைய பெரியவர்களால் (பழையவர்கள்) ஏறக்குறைய புறந்தள்ளப்பட்டது.உண்மையை சொல்லவேண்டுமானால் பீட்டில்சை வெறித்தனமாக,பைத்தியங்கள் போல ரசித்தவர்கள் அந்தகாலத்து இளைய தலைமுறையினர்தான். இதே போல்தான் பிரபல அமெரிக்க ராக் அண்ட் ரோல் பாடகர் எல்விஸ் பிரஸ்லி மிக கடுமையாக அப்போதைய பழமைவாதிகளால் குற்றம் சாட்டப்பட்டு ஏளனம் செய்யப்பட்டார்.  முரண்பாடாக இளம் பெண்கள் அவரை போதை வடியும் கண்களோடும்  தாறுமாறாக துடிக்கும் இதயத்தோடும் வரவேற்றனர்.
           பழமைக்கும் புதுமைக்கும் இடையில் உள்ள வேறுபாடு வெறும் ரசனை மாற்றம்  மட்டுமல்ல. "இது எங்கள் இசை" என்று தாங்கள் வாழும் காலத்தின் மீதான காதலை பதிவு செய்யும் ஒரு கர்வம், ஒரு பெருமை மேலும் இதை தாண்டிய ஒரு அடையாளம் இதில் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும்  காலத்தை சுற்றியே பின்னப்பட்டு, ஒரு குறியீடாக அல்லது வெளிப்படையாக நமக்கு  அதை உணர வைக்கிறது. இசை மீதான நம் ரசனையை வலிமையாக்கும் இந்த காலம் கலந்த அடிநாதமே நம்மை திரும்ப திரும்ப குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கத்தூண்டுகிறது.  It's so subtle yet highly addictive.

         காலத்தையும் கானத்தையும் பிரித்துப்பார்க்க முடியாதென்பது தெளிவு. நாம் கேட்கும் எந்த இசையுமே வேறொரு காலத்திற்கு செல்லும் ஒரு பாதையாகவே எனக்குத் தெரிகிறது.  உதாரணமாக   நாயகன் படத்தில் வரும் "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலை சொல்லலாம். இந்த படம் வந்த ஆண்டு 1987. ஆனால் இந்த பாடல் 1950 களை சுற்றிய காலங்களை கேட்பவர் மனதில் பதிவு செய்கிறது. இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசை அமைத்தவரா அல்லது படத்தின் இயக்குனரா என்பது விவாதத்திற்குறியது. ஏனென்றால் அதே இசை அமைப்பாளர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு  முன் நடந்த  கதையை களமாக கொண்ட 1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற  படத்திற்கு போட்ட பாடல்கள் எல்லாமே எழுபதின் குரலாகவே ஒலித்தனவே அன்றி 1947க்குமுற்பட்ட கால கட்டத்தை உணர்த்தவில்லை. இதே வரலாற்றுப்பிழை பல (வாகை சூட வா, பரதேசி, சுப்பிரமணியபுரம், ஆட்டோகிராப், பொக்கிஷம், போன்ற பீரியட் )படங்களுக்கு நடந்ததுதான்.        
        உலக இலக்கியங்களை பெறுத்தவரை ஒன்று சொல்வதுண்டு. ஆங்கிலேயர்கள் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருஷ்ய கதைகளை மொழிபெயர்த்தபோது அந்த காலத்தில் நிலவிய ஆங்கில சொற்களையே பயன்படுத்திக்கொண்டார்கள். ஏனென்றால் அப்போதுதான் கதை  குறியீடாக காட்டும் காலத்திற்கு ஒரு வாசகன் செல்ல முடியும்.  Otherwise  the reader is stranded in the highway of time between the feel of the past and the vocabulary of   the present.  இவ்வாறு கதையின் காலத்திற்கும் அதை ஒட்டிய இசைக்கும் தொடர்பில்லாமல் (அதை பற்றிய சிறிது ஞானமும் இன்றியே) பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக என்னுள்ளில் ஏனோ, உச்சி வகுடெதுத்து  போன்ற பாடல்களை கேட்கும் போது  நமக்கு சுதந்திரத்திற்கு முன்னைய இந்தியா நினைவுக்கு வராமல் அந்த பாடல்கள் வந்த எழுபதுகளே ஞாபகம் வருவதுண்டு. ஆனால் அதே இளையராஜா நாயகன் படத்தில் அந்தத் தவறை செய்யவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் நான் சிரித்தால் தீபாவளி  என்ற பாடல் மட்டுமல்ல நீ ஒரு காதல் சங்கீதம் என்ற பாடலுக்குமே அவர் எண்பதுகளின்  இசையை தவிர்த்திருப்பார்.  ஆனால் ஹே ராம் என்ற படத்தில்  மீண்டும் பழைய தவறையே அவர் செய்தார்.
            Composing music for period films is nothing but an adventure. பெரும்பாலும் எல்லா இசை அமைப்பாளர்களும் இந்த  நெருப்பை தாண்டும் தேர்வில் வெற்றி பெறுவது இல்லை. எப்படி  1939 ஆம் வருடத்தை குறியீடாக சொல்லும் ஒரு கிராமத்து  படத்தில் அப்போது நமக்கு பழக்கமே இல்லாத கிடார் அல்லது டிரம்ஸ் இசையை கொண்டு ஒரு காட்சியை நிரப்ப முடியும்?அவ்வாறான ஒரு படத்தின் பாடல்களில் நவீன கவிதை வரிகளை கேட்கையில்  உண்மையில் அவ்வாறான வார்த்தைகள் அப்போது புழக்கத்தில் இல்லாததால் பழைய  துணியில் உள்ள கிழிசலை மறைக்க பட்டுத்துணி வைத்து ஒட்டு போட்ட அபத்தமே மிஞ்சும்.

             இப்படி முரண்பாடாக இருக்கும்  பாடல்களுக்கிடையே அந்த காலத்தை தாண்டி   ஒலித்த பாடல்களும் உண்டு. இவற்றை ahead of their times என்று குறிக்கலாம். உதாரணத்திற்கு சில பாடல்களை பட்டியலிட்டிருக்கின்றேன். அவை தான் சார்ந்த காலத்தையும் தாண்டி இன்றைக்கும் மிக நவீனமாகவும் இளமையாகவும் இருப்பதே அவைகளின் சிறப்பு.

      "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" படம்-அடுத்த வீட்டுப்பெண், ஆண்டு 1960 (இசை- ஆதி நாராயண ராவ்)
        "பாட்டு பாடவா?"- தேன் நிலவு ,1961.(எ எம் ராஜா)
        "தெரியுமா?"- பாசமா நேசமா(எ எம் ராஜா) (இந்த பாடலை உங்களுக்கு தெரியுமா?)
    "சொன்னது நீதானா?"-நெஞ்சில் ஓர் ஆலயம்,1962 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
     "பாடாத பாட்டெல்லாம்", வீரத் திருமகன் ,1962 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
      "என்னை எடுத்து "-படகோட்டி,1964,(விஸ்வநாதன் ராமமூர்த்தி)
        "நீயும் பொம்மை நானும் பொம்மை" -பொம்மை ,1964 (எஸ் பாலச்சந்தர்)
       "யார் அந்த நிலவு?",சாந்தி,1965 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
   "காதல் காதல் என்று பேச"-உத்தரவின்றி உள்ளே வா, 1972 (எம் எஸ் விஸ்வநாதன்)
        " உறவுகள் தொடர்கதை",-அவள் அப்படித்தான்,1978 (இளையராஜா
        "இது ஒரு பொன் மாலை பொழுது" நிழல்கள் ,1980(இளையராஜா)
        "பனிவிழும் மலர் வனம்"- நினைவெல்லாம் நித்யா,1982 (இளையராஜா)
        "காக்கை சிறகினிலே"- ஏழாவது மனிதன்,1982 (எல்.வைத்தியநாதன்)
        "புதிய பூவிது"- தென்றலே என்னை தொடு ,1987(இளையராஜா)
         "கொஞ்சம் நிலவு"-திருடா திருடா,1993 (எ ஆர் ரகுமான்)
         "சந்தோஷக் கண்ணீரே" -உயிரே,1998 (எ ஆர் ரகுமான்)
     
            எல்லா பாடல்களுமே ஒரு குறிப்பிட்ட காலத்தை நமக்குஉணர்த்தத் தவறுவதில்லை. இருந்தும் நாம் எப்படி பாடல்கள் காட்டும் காலத்தை உள்வாங்கிக்கொள்கிறோம் என்பதில்தான் நமது ரசனைகள் வேறுபடுகின்றன.  சிலருக்கு சில பாடல்கள் இனியவை. ஆனால் பலருக்கோ அவை பழையவை.
             எடுத்துக்காட்டாக அமுதை பொழியும் நிலவே என்ற பாடலில் உள்ள மெலடி, இனிமை, ஒன்றிணைந்து ஒலிக்கும் குரல்கள், அந்த பாடல் தரும் மயக்க நிலை, இவற்றை "இதெல்லாம் பழைய பாட்டு" என்ற ஒரே முகச் சுழிப்பின் மூலம் புறந்தள்ளுவது மிக எளிதானது. சொல்லப்போனால் பழசு என்று முத்திரை குத்தி பல மேன்மையான இசையை நாம் ரசிக்கத் தவறுகிறோம். ஒரு பாடலின் காலத்தை வைத்து அதை மதிப்பீடு செய்யும் இந்த அரைவேக்காட்டுத்தனமான ரசனை ஒரு குறிப்பிட்ட வயது வரை எல்லோர்க்கும் இயல்பாக இருக்கும் குணமே. ஆனால் நாம் கண்டிப்பாக  மாற வேண்டியஇடத்திற்கு ஒருநாள் வருவது நிச்சயம்.  நம் இசை ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாம் இந்த காலம் என்கிற தடையைத் தாண்டி பயணிக்க வேண்டியதாக இருக்கிறது.பொதுவாக வெகு சிலரே இசையின் எல்லா பரிமாணத்தையும் எந்த வித முன்தீர்மானித்தலும் (prejudice) இன்றி ரசிக்க கற்றுக்கொள்கிறார்கள்.  இவர்களே உண்மையான இசை விரும்பிகள். நான் அப்படிப்பட்ட ஒருவனாகவே இருக்க விருப்பப்படுகிறேன்.
              
           அடுத்தது:இசை விரும்பிகள்II- தடித்த இசை 
             
      
            

10 comments:

  1. காரிகன் நீங்கள் ருஷ்ய இலக்கியங்களைத் தாண்டி உங்களுக்கு 'மிகவும் பிடித்த' இசை பற்றி எழுத ஆரம்பித்திருப்பது இணைய உலகத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றே தோன்றுகிறது. ஏனெனில் இணையத்தில் தமக்குப் பிடித்த ஒன்றைப் பற்றி எழுதுவது, தன்னுடைய விருப்பத்திற்கு எது உகந்ததோ அதனை எழுதுவது, தன்னுடைய விருப்பங்களுக்கு சார்பாக ஒரு குழுவை அல்லது கூட்டத்தை உருவாக்க நினைப்பது என்பவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே விளங்குகின்றன. இதனை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் எழுதினார்களென்றால் பிரச்சினை இல்லை. ஆனால் நாம் என்ன உணர்கிறோமோ, நமக்கு என்ன தோன்றுகிறதோ, நாம் என்ன நினைக்கிறோமோ, அல்லது நமக்கு என்ன தெரிந்திருக்கிறதோ இது மட்டும்தான் சரியானது முறையானது நான் மட்டும்தான் அறிஞன் என்று நினைத்துக்கொண்டு பிதற்ற வருவதுதான் அபத்தங்களின் உச்சம். இந்தவகை அபத்தங்கள்தாம் பெருவாரியான அளவில் இணையத்தில் நிறையவே இருக்கிறது.

    இசையைப் பொறுத்தவரை அது ஒரு அனுபவம்தான். அதுவும் சுகமான அனுபவம். இந்த சுகமான அனுபவத்தில் கொஞ்சம் சோகமும் கலந்துகொள்ளும்போது அது மறக்கவே முடியாத அனுபவமாக மாறுகிறது. சோக இசையும் சோகப்பாடல்களும் என்றும் மறக்கமுடியாத பாடல்களாக மாறிப்போவது அதனால்தான்.
    அந்தந்த காலங்களில் ஏற்படும் இசையனுபவம் பிரத்யேகமானதுதான்.

    ஆனால் காலம் அந்த இடத்திலேயே நிற்பதில்லை. அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. அப்போது நேற்று இன்றாகவும் இன்று நாளையாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது.அப்படியானால் நேற்று உனக்கு இசையனுபவமாக இருந்த ஒன்று இன்றைக்கு வேறொருவனுக்கு இசையனுபவமாக இருக்கமுடியாது என்றே ஆகிறது.

    இந்த இடத்தில்தான் காலத்தை வென்று நிற்பவையாகச் சிலவற்றை அடையாளம் காணவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இந்த அடையாளம் காணும் நுட்பத்தை நாம் கற்றுக்கொண்டோம் என்றால் சரியானவற்றை இனம்காணும் பக்குவம் நமக்கு வந்துவிடும். அந்தப் பக்குவத்தைக் கொண்டுவரும் கலையை மிக அருமையாகச் செய்திருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்ததும் இதுதான்.இந்தவகையான கட்டுரைகள்தாம் இணையத்திற்குத் தேவைப்படுகின்றன.
    உங்களைப் பெரும்பாலானவர்கள் உங்களின் பின்னூட்டங்களை மட்டும் படிக்கிறவர்கள் நீங்கள் ஒரு இளையராஜாவின் எதிரி என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல என்ற தெளிவை முதல் அத்தியாயத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

    இன்னமும் நிறைய வரவேண்டும் என்பதற்காகத்தான் இதனை முதல் அத்தியாயம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
    நீங்கள் சொல்லப்போகும் நிறைய விஷயங்களுக்கான முன்னுரை இது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏகப்பட்ட விஷயஞானத்துடன் இருப்பவர்கள் வெறும் பின்னூட்டப் புலிகளாக மட்டுமே இருந்துவிடலாகாது என்பதற்காகச் சொல்கிறேன்......களத்தில் இறங்கிவிட்டீர்கள். அடித்து ஆடுங்கள்.
    முதலில் தமிழ்மணம், இண்ட்லி,தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் தவறாமல் இணையுங்கள். அப்போதுதான் நிறையப்பேரைச் சென்றடையமுடியும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அமுதவன் அவர்களுக்கு,
    தங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். வருகைக்கு நன்றிகள் பல. உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் நீங்கள் எழுதி இருந்த பின்னூட்டம், உங்கள் கருத்துக்கள் எல்லாமே நன்று. சில டெக்னிக்கல் சம்சாச்சாரங்கள் இன்னும்எனக்கு புரிபடவில்லை யாதலால் என்னால் தமிழ் திரட்டிகளில் இந்த பதிவை இணைக்க சில காலம் ஆகும் என்று தோன்றுகிறது. நீங்கள் சொன்னபடி இது ஒரு மிக நீண்ட பதிவுதான். மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  3. டெக்னிகல் சமாச்சாரங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கே சில விஷயங்கள் சரிப்பட்டு வரும்போது உங்களுக்கு ஏன் வராது? ஒவ்வொரு திரட்டிகளிலும் பதிவுகளை இணைக்க என்று ஒரு பகுதி இருக்கிறது. உதாரணமாக 'தமிழ்மணத்தில் இணைக்க' அந்தப் பகுதிக்குச் சென்று அவர்கள் கேட்ட விவரங்களைக் கொடுத்தால் அவர்கள் பாஸ்வேர்டு ஒன்றைத் தருகிறார்கள். பின்னர் பதிவை எழுதிய பிறகு உங்கள் பதிவின் முகவரியைத் தந்து அவர்கள் சேர்க்கச் சொல்லும் இடத்தில் சேர்க்கும்போது அவர்கள் தரும் கடவுச்சொல்லைக் கேட்கும். அதையும் தந்து கிளிக் செய்யும்போது அது பாட்டுக்குத் திரட்டியில் சேர்ந்துவிடுகிறது. நீங்கள் திரட்டிக்குள் நுழைந்தால்தான் ரொம்பப் பேருடைய கொட்டம் அடங்கும்.
    பதிவுகளுடன் google imageக்குச் சென்றால் ஏராளமான நமக்கு வேண்டிய புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவற்றையும் பதிவுடன் சேர்த்தால் பதிவுக்கு மேலும் அழகு சேர்க்கும்.

    ReplyDelete
  4. காரிகன் அவர்களே ! நாம் மறுபடியும் சந்திக்கின்றோம் என்று நினைக்கின்றேன் . உங்கள் பதிவு அழகான ஒன்று . ரசிக்கும்படியான நல்ல அலசல்தான் . ஆனாலும் இளையராஜாவிடம் மட்டுமே குறை கண்டு கொண்டே இருக்கிறீர்கள் . நாயகன் படத்தில் 'நான் சிரித்தால் ' என்ற பாடலைப் பற்றி சொல்லி இருந்தீர்கள் . ஆனால் அந்த புதிய முயற்சியை அதற்கு முன்னர் யாரும் செய்ததில்லை . அதனால் அந்த பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது .

    பீரியட் படத்துக்கு ஏற்றாற்போல் எல்லா பாடலும் இருந்தால் அன்றைய கால கட்ட ரசிகன் ரசிக்க மாட்டான் . விலையும் போகாது . மருந்து மாதிரிதான் அப்படிப்பட்ட பாடல்களை கொடுக்க முடியும் . அப்படித்தான் இளையராஜாவும் கொடுத்திருப்பார் . உன்னை ஒன்று கேட்பேன் பாடலை மறுபடியும் 'பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அதே பாடகர்களை வைத்து அழகாக கொடுக்கவில்லையா ? பழைய மொந்தை புதிய கள் . நன்றாகத்தான் இருந்தது .

    அதே நேரத்தில் ரகுமான் ' கிழக்குச் சீமையிலே ' படத்தில் போட்ட பாடல்கள்
    எல்லாம் உண்மையான கிராமத்து பாடல்களாகவா இருந்தன ? ஆரம்பத்தில் மிகவும் அந்நியப்பட்ட்டுப் போனது போல் தெரிந்த அந்த பாடல்கள் ரசிகர்களால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படத்தான் செய்தன . ஆனால் இந்தியாவில் கேட்கப்படாத இசை போலத்தான் தெரிந்தன .

    உங்களின் பதிவில் ஒன்று தெரிந்து கொண்டேன் . கால நீரோட்டத்தில் நீந்த மனிதனுக்கு பிடிப்பதில்லை . எதையாவதை பற்றிக் கொண்டு அங்கேயே இருந்து விட முயல்கின்றான் . அவன் ரசனை போக போக காலாவாதி ஆகிவிடுகிறது . புதியவனால் கேலிக்குரியவனாகின்றான் . உங்கள் பார்வையில் நான் கூட அப்படித்தானோ?

    ReplyDelete
    Replies
    1. சார்லஸ் அவர்களுக்கு,
      உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் இன்னும் அந்த பழைய பின்னூட்ட சூழலிலேயே மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நான் இளையராஜாவை குற்றம் சொல்லி எங்குமே இந்தபதிவில் எழுதவில்லை அப்படி உங்களுக்கு தோன்றுவது உங்களின் மன பிராந்தி.(சரியான வார்த்தை என்று எண்ணுகிறேன்). மேலும் இது ஒரு மிக நீண்ட பதிவு. ரகுமான் பற்றிய உங்களின் கருத்துக்கு கண்டிப்பாக இந்த பதிவின் கடைசியில் ஒரு விளக்கம் உங்கள் கண்களுக்கு கிடைக்கும். என்னை பொறுத்த வரை நீங்கள் கூடவே ஒரு இசை விரும்பி என்று நினைக்க தோன்றுகிறது. உங்களின் இசை ரசனை கூட மேன்மையானதாக இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

      Delete
  5. 'இளையராஜாவிடம் மட்டுமே குறைகண்டுகொண்டே இருக்கிறீர்கள்' இளையராஜாவிடம் 'மட்டுமே' எல்லாவித சிறப்புக்களும் இருக்கின்றன, வேறு யாரிடமும் எதுவுமே இல்லை என்று நினைப்பதனால் வரும் எண்ணம் இது. இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் அல்லது அவர் மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் அவருக்கு இணையாக இங்கே மட்டுமில்லை உலகிலேயே யாரும் இல்லை என்றெல்லாம் இணையத்தில் வந்துகொண்டிருக்கும் கருத்துக்கள் மத்தியில் அவரை லேசாக விமர்சித்துவிட்டாலேயே ஓடிவந்து விடுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் அணுகுபவர்கள் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  6. இரண்டு நாட்களுக்கு பிறகு இன்றுதான் இன்டர்நெட் இணைப்பு மீண்டது, எனவே இந்த தாமதம். அமுதவன் அவர்களே நாம் என்னதான் நடுநிலைமையோடு இசையை விமர்சித்தாலும் ராஜா ராஜாதான் குழுமத்தினர் சட்டையை மடித்து மல்லுகட்டுவது நிற்கப்போவதில்லை. நான் சில திரட்டிகளில் இந்த பதிவை இணைக்க முயற்சி செய்திருக்கிறேன் எதோ ஒட்டு லைக்ஸ் என்று எனக்கு இதுவரை புரியாத வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. என்னுடைய அடுத்த இசை விரும்பிகள் பதிவை எழுத ஆரம்பித்துள்ளேன்.உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. மிக ஆழமான சிந்திக்க தூண்டும் பதிவு.

    "எது நல்ல இசை?"
    "நல்ல இசை என்பது நான் சிறுபிள்ளையாக இருந்த போது கேட்ட இசை."
    "எது மோசமான இசை?".
    "மோசமான இசை என் பிள்ளைகள் கேட்கும் இசை."

    உங்களுக்கு நிகழ்ந்தது போலவே, என்னையும் மிகவும் சிந்திக்க தூண்டிய வரிகள். நீங்கள் கூறிய அத்துணை காரணங்களுடன், முன்னேறிவரும் ஒலிப்பதிவு தொழில்நுட்பமும், காதோடு இணைந்த இசை கேட்கும் கருவிகளும் தலைமுறைகளுக்கு இடையிலான இசை ரசனை வெளியை அதிகரிக்கிறது என்றே தோன்றுகிறது.

    இந்த பதிவின் தொடர்சிகளை தவறாது படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  8. திரு நிஷா-பிரதீபன் (நீங்கள் ஆணா பெண்ணா அல்லது ஒருவரா இருவரா என்பது தெரியவில்லை)
    உங்களின் வருகைக்கு நன்றி. இசையைப் பற்றி எழுதுவது ஒரு ஆனந்தமான அனுபவம். நமக்கு பிடித்த இசையைப் பற்றி சிலாகித்து எழுதவதைக் காட்டிலும் இசையை விருப்பு வெறுப்பின்றி அணுகுவது சவாலானது. இசை மாறி வரும் தொழில் நுட்பத்துடன் உருமாறிக்கொண்டே வருவதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த இசைவிரும்பிகள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. இதுதான் இசை விரும்பிகளின் ஆரம்பமோ? அருமையான பதிவு. தொடர்ந்து பத்து பதிவுகளையும் படிக்கும்போது நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரிகிறது.நான் கூட நீங்கள் இளையராஜாவை மட்டுமே விமர்சித்தீர்கள் என்று எண்ணினேன்.

    ReplyDelete