Thursday 30 May 2013

இசை விரும்பிகள் VII- அந்நியக் காற்று 


            நம் தமிழ்த்திரையிசையில் காலம் காலமாக வட இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் தீற்றலும் தொடுகையும் பாதிப்பும் எப்போதும்  இருந்துகொண்டே இருக்கிறது.விடுதலைக்கு முன் "மெட்ராஸ் மாகாணத்தில்" படம் எடுத்தவர்கள் பொதுவாக அதை தமிழைத் தாண்டி தெலுகு மற்றும் ஹிந்தி மொழியிலும் எடுப்பதென்பது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு சம்பிரதாயம்.. குரு தத், பிரிதிவி ராஜ் கபூர், நர்கீஸ், ராஜ் கபூர், நூடன், மதுபாலா, திலிப் குமார், தேவ் ஆனந்த் போன்ற ஹிந்தியின் ஆளுமைகள் அப்போது தமிழ்நாட்டிலும் பரிச்சயப்பட்ட பெயர்களாகவே  இருந்தன. மேலும் ஹிந்திப் பாடல்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தது போல ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு பாடல்கள் அமைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே வந்தது.  ஐம்பதுகளில் தமிழ் திரையில் பராசக்தி கொண்டு வந்த அந்த கடல் மாற்றத்திற்குப் பின்னும் (sea change) நம் பாடல்களில் எளிமை வந்து சேரவில்லை. இந்த ஹிந்தி இசையின் பாதிப்பை அகற்ற நம் தமிழ் இசைஞர்கள் சிரமமான படிகளைத் தாண்டவேண்டி இருந்ததை நாம் அறிவோம். 

              நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் வந்த பல தமிழ்ப் பாடல்களில் வட இந்திய வாடை வீசியது  நம்மிடம் இசை வெற்றிடம் ஏற்பட்டதின் அடையாளம் அல்ல. மாறாக படத்தின் தயாரிப்பாளர்கள் புதிதாக தமிழுக்கென்று இன்னொரு மெட்டு அமைத்து பாடல்களை அமைப்பதைவிட இப்படி சுலபமாக ஹிந்தி மெட்டையே தமிழிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணியதே  காரணம்.  ஹிந்தி இசையின் ஊடுருவலை நம் இசை முன்னோடிகள் தடுக்க முனைந்தது  தமிழிசைக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தது. அதுவே நம் மெல்லிசை. ஜி.ராமநாதன், கே வி மகாதேவன், எ எம் ராஜா,விஸ்வநாதன் ராமமூர்த்தி, சுப்பையா நாடுயு, சுதர்சனம் டி ஆர் பாப்பா போன்றவர்கள் ஐம்பதுகள் அறுபதுகளில் தமிழ் இசையை வெகுவாக மெருகேற்றி அதை ஒரு சாதாரணனின் ரசனைக்கு உட்படுத்தினார்கள். இந்த காலகட்டத்தில் ஹிந்தி இசையின் தலை நசுக்கப்பட்டு அந்நிய நுழைவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஹிந்திப் பாடல்களின் சாயல் சிறிதுமின்றி நம் தமிழ்ப் பாடல்களை  சிறப்பாக உருவாக்க முடியும் என்று மெல்லிசை மன்னர்கள், இசை மேதை, திரையிசை திலகம் போன்றவர்கள் நிரூபித்துக்  காட்டினார்கள். "அத்தான் என்னத்தான்" பாடலை இந்தியாவின் பாடும் பறவை என்று விளிக்கப்படும் லதா மங்கேஸ்கர் வியந்து பாராட்டும் அளவிற்கு  ஒரு தனி அடையாளம் நமக்கு ஏற்பட்டிருந்தது . ஹிந்தியின் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவரான முகமது ரபி அவர்கள் மறைந்த டி எம் எஸ்சின்  சாரீரத்தை அதிசயித்தது ஓர் ஆச்சர்யம்.(டி எம் எஸ் ரபிதான் தன் ஆதர்ச பாடகர் என்று சொல்வதுண்டு).
         தமிழிசை வெள்ளமாகப் பாய்ந்துகொண்டிருந்த சமயத்தில் மாடர்ன் தியேட்டர்சின் ஆஸ்தான இசைஞராக விளங்கிய வேதா மறுபடியும் ஹிந்தி மெட்டுக்களை தமிழில் விதைத்தார்.இவரின்  முக்கால்வாசி பாடல்கள் எதோ ஒரு புகழ் பெற்ற ஹிந்திப் பாடலின் அப்பட்டமான நகலாகவே இருந்தன. ஆனால் பல விதத்தில் வேதாவால் தமிழ்ப் படுத்தப்பட்ட பாடல்கள் அதன் அசலை விட மிக அழகாகவும் அருமையாகவும் அமைந்துவிட்டது ஒரு அழகான முரண்பாடு என்றே சொல்லலாம்.   குறிப்பாக வேதாவின்
பார்வை ஒன்றே போதுமே, நானே வருவேன்-யார் நீ
,தொட்டுத் தொட்டு பாடவா,இன்னும் பார்த்துகொண்டிருந்தால்-வல்லவன் ஒருவன்
பிருந்தாவனத்தில் பூவெடுத்து- சி ஐ டி சங்கர்
நான் மலரோடு தனியாக, ஆசையா கோபமா- இரு வல்லவர்கள்
மனம் என்னும் மேடை மேலே,ஓராயிரம் பார்வையிலே-வல்லவனுக்கு வல்லவன்
போன்ற பாடல்கள் ஹிந்தியிலிருந்து உருவப்பட்ட மெட்டாக இருந்தாலும் கேட்கும் போது முழுவதும் தமிழ்ப் பாடல்களாகவே ஒலித்தன. இதன் அசல்களை கேட்க நேரிட்டால் கண்டிப்பாக வேதாவின் தமிழ் பாடல்களே சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.பலரிடம் இதுவெல்லாம் ஹிந்திப் பாடல்களின் தழுவல் என்று நான் சொன்னபோது "சரிதான், ஆனால் கேட்க நன்றாக இருக்கிறதே"என்றே பதில் கிடைத்திருக்கிறது. அதே கண்கள் படத்திற்கு வேதா இசை அமைக்கும் முன் அதன் தயாரிப்பாளர் எ வி மெய்யப்பன் கண்டிப்புடன் இந்தப் படத்தில் ஹிந்தி தழுவல் பாட்டுகள் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கவே, வேதா (முதல் முறையாக?) இந்தப் படத்தில் நகல் எதுவும் எடுக்காமல் பாடல்கள் அமைத்ததாக படித்திருக்கிறேன். ஒ ஒ எத்தனை அழகு(நேர்த்தியான மேற்கத்திய கலப்பிசைப்  பாடல்),கண்ணுக்குத் தெரியாதா,பொம்பள ஒருத்தி இருந்தாளாம்,வா அருகில் வா மற்றும் அதிரடியான பூம் பூம் பூம் மாட்டுக்காரன் பாடல்கள் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் ஒ ஒ எத்தனை அழகு, பூம் பூம் பூம் மாட்டுக்காரன் இரண்டும் இத்தாலி, ஆங்கில பாடல்களின் காப்பி என்று  கருதப்படுகிறது. மிகவும் புகழ் பெற்ற எல் ஆர் ஈஸ்வரியின் "பளிங்கினால் ஒரு மாளிகை" (வல்லவன் ஒருவன்)ஒரு பிரெஞ்ச் பாடலின் தழுவலாக இருந்தாலும்  மறுக்க முடியாத அளவுக்கு ஒரு அபாரமான பாடல். மிகச் சிறந்த காதல் பாடல் வரிசையில் மறு பேச்சின்றி  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓராயிரம் பார்வையிலே  உண்மையிலேயே நம்மை ஆக்ரமிக்கும் ஒரு பாடல்.

        வேதாவின் இசையில் ஹிந்திப் பாடல்கள் தமிழ்ப் படுத்தப்பட்டாலும் தமிழர்கள் நேரடியாகவே ஹிந்தி இசையை விரும்பத் துவங்கியதே இந்தப் பதிவின் அடிநாதம்.இப்போது அது எப்படி இங்கே சாத்தியப்பட்டது என்பதை காணலாம்.

,      40 களிலேயே புகைந்த ஹிந்தி எதிர்ப்பு 60களின் மத்தியில் உச்சம் பெற்று கல்லூரி மாணவர்களின் கைகளில் ஆயுதமாக மாறி ஒரு புது வேகம் அடைந்து ஆபத்தான பரிணாமம்  தொட்டது.ஹிந்திப் படங்கள் நிறுத்தப்பட்டன. ஹிந்தி எழுத்துக்கள் தார் சாயம் பூசிக்கொண்டன. ஹிந்திப் புத்தகங்கள் தீயை ருசித்தன. மாணவர்களின்  இந்த அரசியல் அவதாரம் தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட கலவரமான சூழலில்தான் ஆராதனா என்ற ஒரு ஹிந்திப் படம் 1969 ல் வெளிவந்தது.

              ஆராதனாவின் மையப்புள்ளி வழக்கமான தாய்-மகன் பாசம் பற்றியது. (இதுவே 5 வருடங்கள் கழித்து தமிழில் சிவகாமியின் செல்வன் என்று உருமாற்றம் பெற்று வந்தது) அதற்கு முன்பே ராஜேஷ் கண்ணா ஹிந்தியில்   சில படங்களில் நடித்திருந்தாலும்  இந்தப் படம்  இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற ஒளியை அவர் மீது பாய்ச்சியது. ஷர்மிளா தாகூர் -ராஜேஷ் கண்ணாவின் காதல் காட்சிகள், தாய் மகன் பாசப் போராட்டம் போன்ற வழக்கமான அம்சங்கள்  இதில் இருந்தாலும் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான   ஒரு காரணம்  எஸ் டி பர்மன்  அமைத்த பாடல்கள்.  ஆராதனாவின் பாடல்கள் வட இந்திய குக்கிராமங்களில் கொடி கட்டிப் பறந்ததில் வியப்பொன்றும் இல்லை. வியப்பு என்னவென்றால் ஒரு சராசரி தமிழன் மேரே சப்னோ கி ராணி என்றும் ரூப்பு தேரா மஸ்தானா என்றும் அர்த்தம் புரியாமல் முனுமுனுத்ததுதான். தமிழக வானொலிகளில் இந்தப் பாடல்கள் இடை விடாது ஒலித்தன. ஹிந்தி எதிர்ப்பு வீரியமாக ஒரு ஆட்சி    மாற்றத்திற்கே  அடிகோலிய சமயத்தில் தமிழகத்தில் ஆராதனா பாடல்கள் சத்தமாக ஒலித்தது ஒரு முரண். இதை நான் குறை சொல்லும் நோக்கில் எழுதவில்லை. 

          ஹிந்தியின் சாகாவரம் பெற்ற குரலைக்கொண்ட  முகமது ரபி,கிஷோர் குமார், லதா மங்கேஸ்கர்,ஆஷா போன்ஸ்லே போன்றவர்களின் பாடல்களை இங்கே தமிழ்நாட்டில்  ஒரு ரசிகன் விருப்பு வெறுப்பு எதுவுமின்றி கேட்டதே நாம் இசை மீது கொண்டிருந்த காதலின் அடையாளம். இப்போது சிலர் விவரிப்பதைப்போல ஹிந்திப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்தியது உண்மையாக இருந்தாலும் அவை இசையிலும் தரத்திலும் மெருகேறி இருந்ததை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

          கிஷோர் குமாரின் ஹை பிட்ச் உற்சாகம்,முகம்மது ரபியின் உள்ளத்தை வருடும் மென்மை , ஆஷா போன்ஸ்லேயின் ஆர்ப்பாட்டமான குதூகலம் தமிழ் நாட்டின்  கரையோரம் கேட்க துவங்கியது.  ஹிந்தியின் பிரபல இசைஞர்களின் காவியப் பாடல்கள்  இங்கேயும் எதிரொலிக்க, ஹிந்தி எதிர்ப்பின்  கோட்டையான தமிழ் நாட்டில் ஒரு அந்நியக் காற்று ஆவேசமாக வீசத் தொடங்கியது. இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை ராஜேஷ் கன்னாவிடமும் ரிஷி கபூரிடமும் அமிதாப் பச்சனிடமும் கண்டுபிடித்தார்கள். அவர்களின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள்  வரவேற்பை பெற்றன.

         எஸ் டி பர்மன், (சச்சின் தேவ் பர்மன் ஹிந்தியின் மகா ஆளுமையாக இருந்தவர். இவர் மீது கொண்டிருந்த அபிமானத்தினாலேயே தன் மகனுக்கு சச்சின் என்று பெயர் வைத்தார் ரமேஷ் டெண்டுல்கர்.) ஹேமந்த் குமார், ஆர் டி பர்மன்( ராகுல் தேவ் பர்மன் எஸ் டி பர்மனின் மகன்)கல்யாண்ஜி ஆனந்த்ஜி, லஷ்மிகாந்த் பியாரிலால்,மதன் மோகன், ஒ பி நையர், ரோஷன்,சலில் சவ்திரி என்ற பெயர்கள் தமிழ்நாட்டில் கேட்க ஆரம்பித்தன.

         மதர் இந்தியா,முகல் இ ஆசாம்( இசை-நவ்ஷாத்) ஆவாரா, அந்தாஸ்(ராஜ் கபூர் நடித்தது),பியார் போன்ற பல ஹிந்திப் படங்கள் ஐம்பதுகள் அறுபதுகளில் இங்கே பெரிய நகரங்களில் வெற்றிகரமாக ஓடி இருந்தாலும்,ஆராதனா பெற்ற வெற்றி வேறு விதமானது. ஆராதனா தமிழ்நாட்டின் பல சிறிய திரை அரங்குகளில் ஒரு திருவிழா போல கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து வந்த மேரா நாம் ஜோக்கர், சச்சா ஜூட்டா, கடி படங், ஆனந்த் (சற்றே நீர்க்குமிழி யின் சாயலை கொண்ட ராஜேஷ் கண்ணா அமிதாப் பச்சன் சேர்ந்து நடித்த முதல் படம்),அந்தாஸ், கேரவன், அமர் பிரேம் .ஷர்மிலி,ஹரே ராமா ஹரே கிருஷ்ணா,சீதா ஔர் கீதா(தமிழில் வாணி ராணி),ஜவானி திவானி,ஜுகுனு(தமிழில் கமல் நடித்த குரு),சஞ்சீர் (தமிழில் சிரித்து வாழ வேண்டும்),அபிமான்,பாபி, ஹாத்தி மேரே சாத்தி (நல்லநேரம்) ரொட்டிகபடாஆர்மக்கான்,தீவார்(தீ),ஷோலே,சிட்சோர், , யாதோங்கி பாரத் (நாளை நமதே), சோட்டி  சி பாத் என்று வரிசையாக ஹிந்திப் படங்கள் படை எடுத்தன.


           தமிழ்நாட்டில் ஹிந்தி ஆதிக்கம் உருவாக ஆராதனா, பாபி,மற்றும் ஷோலே  என்ற மூன்று படங்கள் முக்கிய காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆராதனைவை தொடர்ந்து வந்த பாபி மற்றொரு காதல் காவியமாக வர்ணிக்கப்பட்டது.(இதுவே தமிழில் செம்பருத்தி என்று பின்னாளில் வந்து நம்மை இம்சை செய்தது) பாபியின் பாடல்கள் (இசை லஷ்மிகாந்த் பியாரிலால்) மிகவும் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இனிமையானவை என்பதே உண்மை. 75 இல் வந்த ஷோலே (இசை-ஆர் டி பர்மன்) இந்திய வர்த்தக சினிமாவின் உச்சம் என்று கொண்டாடப்படுகிறது.இந்தப் படத்தைப் பற்றி ஒரு பெரிய பதிவே எழுத முடிந்தாலும்  அதை தவிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன். இதன் பாடல்களும் எல்லோராலும் ரசிக்கப்பட்டவை.

           70 களில் ஹிந்திப் பாடல்கள் தமிழ் நாட்டில் பரவலாக ஒலித்தன என்று ஒரு கருத்து உண்டு. அதில் உண்மையும் இருக்கிறது. இதுவரை நீங்கள் ஹிந்திப் பாடல்களை கேட்டதில்லை என்றால் கீழ் கண்ட பாடல்களை நான் உங்களுக்காக சிபாரிசு செய்கிறேன். 70 களில் நம் தமிழகத்தில்  பெருவாரியாக கேட்கப்பட்ட பாடல்களில் சில இங்கே:

 "Roop Tera Mastana" ,Chanda Hai Tu Mera Suraj Hai Tu, -"Mere Sapno Ki Rani",
"Gun Guna Rahe Hai Bhanvare"--ஆராதனா ,இசை- எஸ் டி பர்மன் 

Zindagi Kaisi Hai Paheli(மன்னாடே பாடிய மிக அருமையான பாடல்),-ஆனந்த் இசை-சலில் சவுத்திரி

"Hum Tum Ek Kamre Mein Band Ho","Main Shayar To Nahin"(என்னவொரு பாடல்?),"Mujhe Kuchh Kahna Hai"-பாபி இசை- லச்மிகாந்த் பியாரிலால்.

Yaadon Ki Baarat Nikli Hai, Chura Liya Hai Tumne Jo Dil Ko,(பாட்டில் சத்தத்துடன் ஆரம்பிக்கும் இனிமையான கானம். ஆஷாவின் குரலில் தென்படும் இனிமை ஒரு உல்லாச பயணம்) Lekar Hum Dewana Dil,
Ap Ke Kamre Mein Koi,Meri Soni Meri Tammana Jhooth Nahin Hai-யாதோன் கி பாரத் இசை-ஆர் டி பர்மன். இதன் எல்லா பாடல்களும் மிகவும் ரம்மியமானவை.

"Zindagi Ek Safar Hai Suhana"."Re Mama Re Mama Re".-அந்தாஸ் இசை-ஷங்கர்ஜைகிஷன்.


Ab Jo Mile Hain To","Chadhti Jawani Meri","Dilbar Dil Se Pyare"(இதுவே தமிழில் அழகு என்று ஆனது பாட்சா படத்தில்),"Goria Kahan Tera Desh","Hum To Hain Rahi Dil Ke","Kitna Pyara Wada Hai"(அபாரமான பாடல்),"Piya Tu Ab To Aaja"(ஆஷாவின் இன்னொரு வைரம்) -கேரவன்,இசை-ஆர் டி பர்மன்.

Dum Maro Dum,(படத்தில் இந்தப் பாடல் முழுதும் இடம் பெறுவதில் தேவ் ஆனந்த் விருப்பம் கொள்ளவில்லை.காரணம் இந்தப் பாடல் படத்தை விட பிரபலமாகி விடும் என்று அவர் நம்பியதால் பாதி பாடலையே அனுமதித்தார்)"Ram Ka Naam Badnam Na Karo,"Hare Rama Hare Krishna"-ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ,இசை- ஆர் டி பர்மன்.

Jaaneman Jaaneman Tere Do Nayan"(ஜேசுதாசின் குரலில் சலில் சௌத்திரியின் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான கானம்.  ஒரு முறை மட்டும்  கேட்பது என்பது  சற்று கடினம்) -சோட்டி சி பாத்,இசை--சலில் சவுத்திரி

"Tere Mere Milan Ki Yeh Raina","Meet Na Mila Re Man Ka","Teri Bindiya Re","Loote Koi Man Ka Nagar",-அபிமான்,இசை-எஸ் டி பர்மன் 


"Yeh Dosti Hum Nahin"(திரிசூலத்தில் வரும் இரண்டு கைகள் நான்கானால் பாடல் காட்சி இதன் பாதிப்பே)  ,"Mehbooba Mehbooba",  "Haa Jab Tak Hai Jaan"  
"Koi Haseena"  
-ஷோலே இசை-ஆர் டி பர்மன்.


"Gori Tera Gaon Bada Pyara" ,"Aaj Se Pehle Aaj Se Zyada"  (இந்தப் பாடல் காட்சியின்  சாயல் தமிழில் வந்த செந்தாழம் பூவில் பாடலில் இருப்பதை கானன்லாம் அதே ஜேசுதாஸ்   ,அதே ஜீப் அதே மலைப்பாதை. இது 75இல் வந்த படம்.)சிட்சோர்,இசை-ரவீந்திர ஜெயின். இவர் ஒரு கண் தெரியாத இசைஞர் அமெரிக்காவின் சார்லஸ் ரே,ஸ்டீவி வொண்டர் போன்று.
 
Ek main aur ek tu, Hamne tumko dekha, Khullam khulla pyaar karenge hum dono, Sapna mera toot gaya கேல் கேல் மே இசை-ஆர் டி பர்மன்.

இதன்  பின் 77இல் வந்த ஒரு படம் அதன் பாடல்களுக்காகவே பேசப் பட்டது.தமிழ் நாட்டின் பல சினிமா தியேட்டர்களில் இந்தப் படம் ஆராவாரமாக ஓடி பெரும்  வெற்றியைப் பெற்றது.அந்தப் படம் ஹம் கிஸ்ஸிஸே கம் நஹி. ஆர் டி பர்மனின் இசையில் அனைத்துப் பாடல்களும் கேட்பவரின் மனதில் ரீங்காரமிட்டன. ஹோட்டல் பாடல் என்ற கான்செப்ட் இன்றுவரை இந்தப் படத்தின் பாதிப்பிலேயே எடுக்கப்பட்டு வருவதே இதன்  சிறப்பு. மெட்லி என்று அழைக்கப்படும் இடைவெளி இன்றி பல பாடல்கள் ஒன்றாக வரும் பாணியில்  இந்தப் படத்தில்வரும் 
Chand mera dil", "Äa dil kya", "Tum kya jaano" and "Mil gaya". பாடல்கள் ஒவ்வொன்றும் அலாதியான அழகும் சுவையும் கொண்டவை.முகம்மது ரபி பாடிய கியாகுவா தேரா வாதா பாடல் ஒரு வித ட்ரான்ஸ் மந்திர சக்தி கொண்டது.  ஆர் டி பர்மன் இந்திய திரையிசையின் அசைக்க முடியாத நாயகனாக இருப்பதின் ரகசியத்தை உணர இந்தப்  பாடல்களே சான்று.
"Bachna Ae Haseeno", "Chand Mera Dil", "Dil Kya Mehfil Hai", "Hum Kisi Se Kum Nahin"(இது கவ்வாலி வகையைச் சேர்ந்தது),"Hum Ko To Yaara Teri Yaari", "Kya Hua Tera Wada",(பொதுவாக ஆங்கில இசையில் முடியும் கிடார் இசை  இங்கே பாடலின் ஆரம்பத்தில் இருக்கும் )  "Mil Gaya Humko Saathi", 
"Tum Kya Jano Mohabbat", "Yeh Ladka Hai Allah- ஹம் கிஸ்ஸிஸே கம் நஹி,இசை-ஆர் டி பர்மன்.
          இதற்குப்பின்னும் பல ஹிந்திப் படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டாலும், தமிழ் ரசிகர்கள் இந்த காலகட்டத்தில்  மீண்டும் தமிழ் இசைக்கு திரும்பி விட்டனர்.இதற்கு மிக முக்கிய காரணம் ஒரு புதிய இளைய  இசைஞர். 70களின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் ஹிந்தி இசை ஆதிக்கம் செலுத்தியதற்கு பின் புலமாக இருந்த காரணிகளை இப்போது நாம் ஆரோய்வோம்.

          70 கள் நம் தமிழ் திரையிசையின் மிக முக்கியமான கட்டம். அப்போது தமிழின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளான எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் தங்கள் இளமையை நிலைநாட்டிக்கொள்ள பெரிதும் முயன்ற சமயம்.இருவருமே இருபது வருடங்களாக தொடர்ந்து திரையில் தோன்றி ஒருவிதமான அலுப்பான நிலைக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிவாஜி தன்னுடைய நடிப்பால் வயதாகும் தன்    பருவத்தை ஒரு விதமாக சமாளித்தாலும் எம் ஜிஆர் இந்த கால கட்டத்தில் நடித்த முக்கால்வாசி படங்கள் அவரின் ரசிகர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தின. நவரத்தினம் என்ற படம் அதை பார்த்த எல்லோரையுமே வெகுவாக சோதித்தது. நீதிக்கு தலை வணங்கு என்ற படத்தில் எம் ஜி ஆரும், நம்பியாரும் கல்லூரி மாணவர்களாக நடித்தது ஒரு மாபெரும் அநீதி.(சிவாஜியும் இதே போன்ற தவறை 70களின் இறுதிகளில் செய்தார்). இதயக்கனி, உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற எம் ஜி ஆரின் அந்திம கால படங்கள் மக்களால் விரும்பப்படவில்லை. (அவை வெற்றிப் படங்களாக இருந்தாலுமே).இந்தப் படங்களில் எம் ஜி ஆரின் ஒப்பனையான இளமை மற்றும் கதாநாயகிகளுடன் அவர் காட்டிய நெருக்கம்  வழக்கமாக  அவரின் படங்களில் இருப்பது போன்று இல்லாமல்   நாகரீகமற்ற முறையில் இருந்தது பெண்கள் மத்தியில் முனுமுனுப்பை ஏற்படுத்தியது. ஆனால்  72 இல் உண்டான அரசியல் மாற்றம் எம் ஜி ஆரை தமிழகத்தின் புதிய சக்தியாக முன்னிறுத்தியது.  இதனால் அவர் படங்கள் அரசியல் அரிதாரம் பூசிக்கொண்டதோடு அவரை ஒரு மக்கள் தலைவராகவும் காண்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாட்டிக்கொண்டன.இந்த நிர்பந்தம் அவர் படத்தின் தரத்தைத் தகர்த்தன.


         இதே காலகட்டத்தில் சிவாஜியின் படங்களும் அவரது ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு சலிப்பைத்  தரத்  தவறவில்லை.ஹிந்தியில் இதே சமயத்தில் ஒரு புதிய இளைய நடிகர் கூட்டம் உருவாகி மக்களிடத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தது. தர்மேந்திரா, ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன், ரிஷி கபூர் போன்ற அடுத்த தலை முறை நடிகர்கள் அங்கே 70 களில் தலைப்புச் செய்தியை ஆக்ரமிக்க நம் தமிழகத்திலோ அப்படியான எந்த மாற்றமும் கண்ணில் தென்படவில்லை. ஹிந்தியில் அவர்கள் நடித்த படங்கள் தமிழில் எடுக்கப்பட்ட போது அந்த இளமைக்கு ஏற்றவர்கள் இல்லாமல் நாம் ஏற்கனவே இருபது வருடங்களாக பார்த்திருந்த "பழைய" நடிகர்களே ஒப்பனையுடன் வருவிக்கப்பட்ட இளமையை திரையில் காட்டினர்.உதாரணம் நாளை நமதே, நீதி,சிரித்து  வாழ வேண்டும்,வாணி ராணி போன்ற படங்கள்.அப்போது இங்கே இருந்த இளைய தலை முறை நடிகர்களான (ஜெய் ஷங்கர் தவிர) ரவிச்சந்திரன்,சசி குமார், சிவகுமார், விஜய குமார், போன்றவர்களும் தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடிக்கத்  தவறிவிட  தமிழ்த்திரை எந்தவித மாற்றமின்றி தத்தளித்தது. ஒரு எதிர்வினையாக இதன் பாதிப்பு இசையிலும் தென்பட்டது.

             வி குமார்,சங்கர் கணேஷ், ஜி கே வெங்கடேஷ் போன்ற இசைஞர்கள் 70களில் தமிழில் வந்தாலும் அவரிகளின் இசையில் எம் எஸ் வி யின் பாதிப்பு அதிகமாக இருந்தது.எம் எஸ் வி என்ற பெரிய ஆல மர நிழலில் இருந்த  அவர்களால் தங்களுக்கென்று  ஒரு தனி பாணியை அமைத்துக்கொள்வதில் சிரமம் இருந்ததாக யூகிக்கலாம். ஒருவேளை ஒரு  நவீன இசைஅமைப்புக்கு அவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள முன் வரவில்லை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.. அப்போது கொட்டித் தீர்த்த  எம் எஸ் வி யின் இசை மழையின் சாரலாக இவர்களின் இசை இருந்தது.(இவர்கள் மிக நல்ல அருமையான பல பாடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார்கள்  என்பதை மறுக்க முடியாது.)  . கீழ்க்கண்ட பாடல்களை கேட்கும் எவருமே இதை எம் எஸ் வி யின் பாடல் என்றே தீர்மானிப்பர்.
        
நான்  உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்- நூற்றுக்கு நூறு,இசை-வி குமார்.
காதோடுதான் நான் பேசுவேன்-வெள்ளி விழா -வி.குமார்.
சித்திரச் சோலைகளே- நான் ஏன் பிறந்தேன்,-சங்கர் கணேஷ்.
உன்னை தொட்ட காற்று -நவகிரகம்-வி குமார்.
தேன் சிந்துதே வானம்-பொண்ணுக்கு தங்க மனசு,இசை-ஜி கே வெங்கடேஷ்.

          (வி குமார்,ஜி கே  வெங்கடேஷ் போன்றவர்களின் சாயலை ஆரம்பகால இளயராஜா இசையில் அதிகமாகவே கேட்கலாம்.)  இசையை அதன் இனிமைக்காகவும் அல்லது இசையை இசையாகக் கேட்கும் மனப்போக்கு பொதுவாக  நம்மிடம் இல்லாத ஒரு வினோத குணம். நடிகர்களை இசைக்கு  முன் நிறுத்தும் நம்முடைய இந்த  இசை ரசனை பல நல்ல இசைஞர்களையும் அவர்கள்  பிரசவித்த அற்புதமான பாடல்களையும் சவக்குழிக்குள் புதைத்துவிட்டது என்பது ஒரு வலிக்கும் உண்மை. 70களின் ஆரம்பத்திலும் மத்தியிலும்  தமிழில் பல சிறப்பான பாடல்கள் வெளிவந்தன. எம் ஜி ஆர் சிவாஜி என்ற இரண்டு சகாப்த நடிகர்களை கேலிபேசும் ஒரு புதிய தலைமுறையினர் இந்த சமயத்தில் தோன்றினர். இந்த ரசிகர்கள் தங்களின் ஆதர்ச நாயகனாக அதுவரை திரையில் இருந்தவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பாமல்  இன்னும் வராத  ஒரு புதிய நாயகனுக்காகக் காத்திருந்தனர்.பெரும் திரளான இந்த இளையவர்களுக்கு  தமிழ் இசை சலிப்பைத் தந்தது.மெல்லிசையின் காலம் அதன் உச்சத்திலிருந்து தொய்ந்து வந்துகொண்டிருந்த இந்த நேரத்தில்தான் இந்த இளைஞர்கள் ஹிந்தி இசையின் மின்சாரத் துடிப்பில் சட்டென்று கவரப்பட்டார்கள்.


           ஹிந்தி இசையின் பொற்காலமாகச் சொல்லப்படும் 60 மற்றும் 70 களில் வந்த பாடல்கள் மிக இனிமையானவை. அவை எந்த விதத்திலும் தமிழ் மெல்லிசையின் தரத்திற்கு குறைந்தவை அல்ல.ஹிந்துஸ்தானி சங்கீதமும் மேற்கத்திய இசை கலப்பும் அபாரமாக இணைய  ஹிந்தி இசை புதிய பரிமானத்தைத் தொட்ட அதே சமயத்தில்தான் தமிழர்கள் அந்த நவீன இசையில் பால் ஈர்கப்பட்டனர். ஹிந்திப் பாடல்களின் இசை கோர்ப்பு தமிழில் கிடைக்காத ஒரு  அனுபவத்தை கேட்டவர்களுக்கு அளித்தது. மேலும் மேற்கத்திய இசை கலப்புக்கு கர்நாடக சங்கீதத்தைக் காட்டிலும் ஹிந்துஸ்தானி  மிக நெருக்கமானது என்று கருதப்படுவது உண்டு. இதை எஸ் டி பர்மன் , சலில்  சவ்திரி, ஆர் டி பர்மன், கல்யாண்ஜி ஆனந்த்ஜி போன்றவர்கள் தங்கள் இசையின் மூலம் நிரூபித்தனர். குறிப்பாக ஆர் டி பர்மனின்  இசை எந்த காலத்திற்கும் நிலைத்திருக்கும் சாகாவரம் பெற்றது.(தந்தை எஸ் டி பர்மன் நோய்வாய்ப் பட்டதால் பிரபலமான ஆராதனாவின் மேரே சப்னோக்கி ராணி, ரூபுதிரா மஸ்தானா பாடல்களை இவரே உருவாக்கினார்) இந்தியாவின் தலைசிறந்த இசைஅமைப்பாளர்  யார் என்ற கேள்விக்கு  இரண்டாம் சிந்தனை இன்றி பலர் குறிப்பிடும்  பெயர் இவருடையதுதான்.மேற்கத்திய இசைக்கலப்பை அதிகமாக ஹிந்தி இசையில் பயன்படுத்தியவர் என்று இவர் மீது சிலர் ஒரு குற்றச்சாட்டை வைத்தாலும் ஆர் டி பர்மன் இசையில் வந்த பெரும்பான்மையான பாடல்கள் ஹிந்தியின்  அணையா விளக்காக இன்றும் ஒளி வீசுவது புறந்தள்ளமுடியாத உண்மை.(ஆர் டி பர்மனை ஒரு விதத்தில் நாம் நம் எம் எஸ் வி யுடன் ஒரே கோட்டில் வைத்துப் பார்க்கலாம்.இருவருமே தங்கள் இசையை அடுத்து நிலைக்கு எடுத்துச் சென்றவர்கள்) பப்பி லஹரி (தேவா போன்று) வந்த பின் ஹிந்தி இசை தன் பொலிவை இழக்கத் துவங்கியது. ஆர் டி பர்மனை  இருண்ட பக்கத்திற்கு அனுப்பிவிட்ட ஹிந்தி இசை அதன் பின் சரியத் தொடங்கியது வரலாறு.இருந்தும் தன் கடைசி படமான 1942 a love story இல்  ஏக் லடுக்கி கோ தேக்கா  தோ என்ற பாடலின் மூலம் தான் ஒரு இசைஅசுரன் என்பதை மீண்டும் நிலைநாட்டி விட்டுச் சென்றார்.. Infact, R.D.Burman went with a bang.

            ஹிந்தி இசையில் பொதிந்திருந்த அந்த நவீன  இசை அமைப்பு, கிஷோர் குமார், ரபி,ஆஷா போன்றவர்களின் ஆர்ப்பாட்டமும் மென்மையுமான குரல்வளம் போன்றவை அப்போது நம்மை  அந்த இசையின் மீது ஒட்டிக்கொள்ளச் செய்ததை நாம் மறக்கமுடியாது.நம் தமிழ் இசையில் இல்லாத ஒரு அனுபவத்தை பெறுவதற்காகவே இந்த அன்னிய ஈர்ப்பு இங்கே சாத்தியப்பட்டது என்று நாம்  அவதானிக்கலாம்.ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து சட்டென ஒரு புதியவரிடம் தாவிச் செல்வதைப் போன்ற இந்த திடீர் காதல்  அதேபோல சட்டென முடிவுக்கு வந்தது. தமிழ் இசையில் புதிய ஒளி ஒன்று தோன்றியதே இதற்கு காரணம். இந்த வெளிச்சம் பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டது.நம் தமிழக மூலையிலிருக்கும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து ஒலித்த இந்த குயிலோசை அடுத்த இருபது ஆண்டுகள் தமிழ்த்திரையிசையை ஆக்ரமிக்கப்போவதை யாருமே அப்போது கணிக்கவில்லை.


அடுத்து: இசை விரும்பிகள் VIII-- மீண்ட இசை.