Sunday 19 February 2017

கலைந்து போகாதே என் கனவே!


எனது பார்வையில் இசைக்கான தேடல் முற்றிலும் உங்கள் தனி இசை ரசனை சார்ந்தது. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதுதான் உங்கள் இசைக்கான அடையாளம். ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த ரசனை பல வடிவங்களாக  மாறிவிடுகிறது.   ஒரு இடத்தில் நீங்கள் சற்று நின்றுகொண்டு உங்களையே என் இசை எது? என்று கேட்டுக்கொள்ள நேரிடும். எந்த கோட்பாடுகளை வைத்து நான் எனக்குப் பிடித்த இசையையும், பிடிக்காத இசையையும் தீர்மானிக்கிறேன் என்ற தெளிவு அப்போது ஏற்பட்டேயாகவேண்டும். இல்லாவிட்டால் இசை என்ற பெயரில் வெளிவரும் எல்லா அபத்தங்களையும் ஆபாசங்களையும் மற்றவர்கள் சிபாரிசு செய்வதற்காக ரசிப்பது போல நடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.








                 கலைந்து போகாதே என் கனவே!








மே மாதம், 1985.

நாம் எல்லோருக்கும் விரும்பித் திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு காலகட்டம் இருக்கும். அது எப்போதுமே கடந்த காலத்தின் ஒரு துணுக்காகத்தான் இருக்க முடியும். எனக்கும் உண்டு. மேலே இருக்கும் இந்தப் பதிவின் அந்த முதல் வரி எனக்கானது.  The summer of '85 always melts me into memories.

மனித முயற்சியில் நாம்  போராடி நிரூபிக்கவேண்டிய பல சாத்தியமில்லாத சவால்களை ஒரு இசை எத்தனை எளிதாக காலத்தின் மீது காலடி வைத்து தன் சுவட்டை பதித்துவிட்டு செல்கிறது! ஒரே ஒரு பாடல் எத்தனை நினைவு இழைகளை உயிரூட்டி முடிந்துபோன அந்த கண நேரத்து இன்பத்தை மனதுக்குள் பிரதியெடுக்கிறது!

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து என் இசை தாகம் மேற்கத்திய நீரூற்றுகளில் திரவம் தேடியது.  பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், எல்விஸ் பிரெஸ்லி, எரிக் கிளாப்டன், லெட் செப்பலின், Pink Floyd. ஈகிள்ஸ் போன்ற மேல்தட்டு இசைக் குழுக்கள் பற்றி அப்போது எனக்கு எதுவும் தெரியாது. அதற்கான பாதைகள் எனக்கு முன் அமைக்கப்படவில்லை. எனவே எனக்கு தெரிந்த, என் வசப்பட்ட மேற்கத்திய இசையான Boney M ஒன்றே என் வானத்தில் தோன்றிய  முதல் மேற்கத்திய மேகம். அதுவும் கூட என் பள்ளி நண்பன் நான் ஆங்கிலப் படங்களை விருப்பத்துடன் பார்ப்பது கண்டு அவனாகவே என்னிடம் ஒருநாள் கொடுத்த ஒரு போனிஎம் கசெட் மூலம் உருவானது. நானாக தேடிப் போகவில்லை.



ஆனால் அதைக் கேட்ட ஒரே நொடியில் ஒரு புதிய வானம் எனக்குள் தோன்றியது. போனிஎம் படைத்த அந்த புதுவானில் அந்த அதிரும் இசை எனக்கு இறக்கைகள் அளித்துக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஞாபகத்தை வரைந்து சென்றது. மொழி தாண்டிய உணர்வுகளுக்கு பரவசம் ஒன்றே இலக்கணமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் kitar என்று எழுதிய ஒரு சிறுவனுக்கு அந்த கிடார் இசையின் மின்சாரம் எப்படி புரிந்திருக்க முடியும்?

மட மடவென போனிஎம் தொகுப்புகள் எங்களது வானொலி அறையின் மேல் அடுக்கில் மஞ்சள் பூக்கள் போல பரவின. தூரங்கள் எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. எங்கும் செல்ல தயாராக இருந்தேன் போனிஎம் அங்கிருக்கும் என்றால்.  இதற்கிடையே  குவீன், வாம், எடி கிராண்ட், அபா, ஓசிபிஸா, போன்ற இசை குழுக்களும் எங்கள் வானொலி அறைக்கு வருகை தந்தன.

இருந்தும் போனிஎம் என் நெஞ்சத்துக்கு நெருக்கமான ஒரு இசையாக இருந்தது. நைட் பிளைட் டு வீனஸ் பாடலில் அதிரடியாக ஒலிக்கும் ட்ரம்ஸ் இசை  கொடுத்த போதையும்  பாடல் முடியும் தருவாயில் அப்படியே அந்த இசை போனிஎம் மின் மிகப் பிரபலமான ரஸ்புடின் பாடலுக்கு உருமாறும் அந்த சிலிர்ப்பான கணமும்  இன்று கூட அதே பழைய பரவசத்தை பகிர்கிறது.



மேலே குறிப்பிட்டுள்ள அந்த summer of 1985 வந்தபோது நான் பள்ளிப்பருவத்தின் இறுதிச் சுவட்டில்  இருந்தேன்.  அந்தக்  கோடையில் எங்கள் வீடு அணிந்துகொண்ட களிப்பும், உற்சாகமும், கொண்டாட்டமும், சிரிப்பலைகளும், சந்தோஷங்களும்,எளிமை கொண்ட ஏகாந்தகளும், ஆனந்தமும் என் ரத்தத்தில் இன்றுவரை நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன. எனது மூளை நியூரான் அமிலங்களின் அந்த 85ஆம் ஆண்டில் கோடைக்  காலம் சிறிய சிறிய ஞாபகத் துணுக்குகளாக மிதந்து கொண்டிருக்கின்றன.

ஏறக்குறைய இருபது நாட்கள் நீடித்த அந்த வசிய கணங்கள் விட்டுச் சென்றிருக்கும் சுவடுகள் ஒன்றே சில நேரங்களில் நான் என்னைத் தொலைக்க ஏதுவான அரவணைப்பு தருபவை. அப்போது நான் கேட்ட ஒவ்வொரு பாடலின் பின்னேயும் இருந்த ஒரு இனிப்பு ஊசி இன்றும் என் உடலில் பாய்கிறது. முடிந்துபோய்விட்ட அந்தக் கோடைக்காலம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்கிறது என்னுள்.

காலம் வரைந்த குடும்பச் சித்திரத்தில் இணைந்துவிட்ட  என் உறவினர்கள், நினைவுகளில் மட்டுமே பார்த்துக்கொள்ளும் என் பால்ய சிநேகிதர்கள்,  இந்த எந்திர யதார்த்தத்தில் இடமில்லாமல் அகன்று போய்விட்ட நான் வாழ விரும்பிய கனவு வாழ்க்கை என்று நான் சுவைத்த எல்லாமே இன்று முகம் மாறிப்போய்விட்ட நிலையில் அதே தீர்க்கமான அந்தப்  பழைய உலகம் ஒரு இசையின் பின்னே ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு நான்கு நிமிடப் பாடலுக்குப் பின்னும் மணிக் கணக்கான நினைவுகள் அடங்கியிருக்கின்றன.

எத்தனை நேசித்தேனோ அத்தனை அதிகமாக போனிஎம் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் நிறைய நான் சந்திக்க நேர்ந்தது. அதில் முதன்மையானது அது ஒரு டிஸ்கோ இசை என்பது. அது உண்மைதான். டிஸ்கோ வகையாக இருந்தாலும் மற்ற நாலாந்திர டிஸ்கோ குழுக்களுக்கும் போனிஎம் இசைக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கவே செய்தது.

போனிஎம் எனது இசை வரைபடத்தில் புதிய இலக்குகளையும், சாலைகளையும் உண்டாக்கியது. நான் நகர்ந்துகொண்டேயிருந்தேன். டிஸ்கோவிலிருந்து பாப். பிறகு ராக், ஹெவி ராக், ரகே, ஜேஸ், ப்ளூஸ், சிந்த் பாப் என்று எனது தோட்டத்தில் பல தாவரங்கள் தலைகாட்டின. டெபேச்சே மோட் போன்ற இசைக் குழுக்களிடம் வந்து சேர்ந்தபோது நான் போனிஎம் இசையை டிஸ்கோ என்று முடிவுகட்டி என் ஞாபக அடுக்குகளின் கீழே தள்ளி புதைத்திருந்தேன். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன நான் கடைசியாக போனிஎம் பாடல் கேட்டு.


மேலும் கல்லூரி சேர்ந்த புதிதில் நான் போனிஎம் பாடல்கள் கேட்பதை அறிந்த நண்பர்கள் சிலர் என்னை போனிஎம் என்று அழைத்து என்னை சிறுமைப் படுத்துவதில் சிறிது பேரானந்தம் கொண்டார்கள். அவர்களது பார்வையில் போனிஎம் வெறும் பாமரர்கள் கேட்கும் இசை. "நாங்களெல்லாம் ஜார்ஜ் மைக்கல், எரிக் கிளாப்டன், மைக்கல் ஜாக்சன் கேட்கிறவங்க" என்ற பகட்டு அவர்கள் பேச்சில் எச்சிலோடு சேர்ந்து தெறிக்கும். நானோ மைக்கல் ஜேக்ஸன் ஜுரம் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் கூட அந்தப் பாடல்களை விரும்பியது கிடையாது. ஆனால் வேறு வகை இசைகளில் காதல் ஏற்பட, ஒரே மாதத்தில் ஆஹா, பெட் ஷாப் பாய்ஸ், சிம்ப்ளி ரெட், போலீஸ் என்று  நான் என் நிறம் மாறினேன். கல்லூரியின் இரண்டாவது வருடத்தில் மைக்கல் ஜாக்சன் விரும்பி ஒருவனிடம் மென் அட் ஒர்க் குழுவின் Be Good Johnny பற்றி கேட்டேன். "நீ போனிஎம் மட்டும்தானே கேப்பே?" என்றான் குழப்பத்துடன். ஆறு மாதம் கழித்து அவனை  நியூ ஹாஸ்டலில் பார்த்தபோது, செண்பகமே செண்பகமே என்று மாறிப்போயிருந்தான். "இன்னுமா சாக்ஸன் (அதாவது மைக்கல் ஜாக்சன் இப்போது அவனுக்கு பிடிக்காதாம்) பாட்டையெல்லாம் கேட்கிறாய்?" என்றான் இகழ்ச்சியாக. "நீயெல்லாம் நல்லா வருவடா!" என்று அவனை ஆசீர்வதித்தேன்.

மெட்றாஸ் வந்தபோது  என் இசைக் கிளைகள் The Alan Parsons Project, Supertramp, Starship, Pink Floyd,The Cars என படர்ந்து விரிந்திருந்தன.நான் ஒரு காலத்தில் போனிஎம் ரசித்துக் கேட்டேன் என்பதே எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. "கேட்டிருக்கேன். ஆனா அவ்வளவா பிடிக்காது" என்று பதில் சொல்லியிருக்கிறேன் போனிஎம் பற்றிய கேள்விக்கு. வளர்ந்துவிட்ட பிறகு திரும்ப அணிய விரும்பாத அரை டிராயரை போல போனிஎம் எனக்குத் தோன்றியது.

இரண்டாயிரம் ஆண்டில் வெளிவந்த மேற்கத்திய இசை என்னை கதிகலங்க அடித்தது. நிர்வாணா, பேர்ல் ஜேம், ரெட் ஹாட் சில்லி பெப்பெர்ஸ் போன்ற அப்போதைய நவீன இசைக் குழுக்கள் அதுவரை கேட்ட ராக் ஒலியை முற்றிலும் மாற்றிப்போட்டு பின்நவீனத்துவ இசைக்கு அடிகோலின. ராக் இசையின் மிக மையமான லீட் கிடாரின் ரிஃப், தனி ஆலாபனைக்கு கதைவடைத்தன. இந்த புதிய இசை குழுக்களின் பாணி  ராக் இசையை கொலை செய்தது.   என் மேற்கத்திய இசை தாகம் முடிந்துபோனது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எழுபதுகளில் basement இசையாக இருந்த பங்க் இசையே தற்போது மாடர்ன் ராக் என்ற பெயரில் வெற்றி பெற்றிருக்கிறது. கிரீன் டே போன்ற நவீன ராக் இசை குழுக்கள் எழுபதுகளில் இருந்திருந்தால் இரண்டு இசைத்தொகுப்புகள் கூட வெளிவந்திருக்காது.



ஜான் மேஜர், ஈகிள் ஐ செரி, வால்பிளாவர்ஸ் போன்றவைகள் கேட்பதற்கே அலுப்பானவை. எந்தவித மெலடியும் இல்லாமல் கவிதையை பேசியே பாடலை "பாடுவார்கள்".

இதுபோன்ற ஒரு சமயத்தில்தான் ஒரு முறை போனிஎம் இசைத்த கிறிஸ்மஸ் இசை தொகுப்பு  என் நண்பர் ஒருவருக்காக வாங்க நேர்ந்தது. என் பள்ளி நாட்களில் கேட்ட பாடல்கள் என்பதால் -அதுவும் தற்போது சி டி என்பதால் கூடுதல் ஆர்வம் வேறு-  மீண்டும் கேட்டேன். பெலிஸ் நவிடாட், மேரிஸ் பாய் சைல்ட் , லிட்டில் ட்ரம்மர் பாய்  பாடல்கள் என்னை எண்பதுகளின் கிறிஸ்மஸ் குளிர் காலங்களுக்கு கூட்டிச் சென்றன. I'll be home for Christmas பாடல் என் மனதில் ஆழத்திலிருந்த அசைவற்று உறைந்து போயிருந்த உணர்ச்சிகளின் மீது தீ வைத்தது. என் எண்ணங்கள் உருகின.



இதைத் தொடர்ந்து போன ஆண்டு ஆமேசான் மூலம் ஐந்து சிடிக்கள் கொண்ட ஒரு போனிஎம் இசை தொகுப்பு வாங்கினேன்.  Take The Heat Off Me, Love For Sale, Nightflight To Venus, Oceans Of Fantasy, Boonoonoonoos என அந்த சிடிக்கள் மின்சார துடிப்புகளாக உருமாறி பின் என் ஸ்பீக்கரின் வழியே மனித குரல்களாக வெடித்தபோது என் பள்ளி நாட்கள், என் பழைய ஒட்டு வீட்டின் ரேடியோ அறை, என் பால்யத்து நண்பர்கள், கம்மாய் தண்ணீரில் பிடித்த மீன்கள் என வண்ணத்துப் பூச்சியின் நிறங்கள் போல பலவித எண்ணங்கள் உதித்தன என் மனதில்.


இவற்றையெல்லாம் மீறிய இன்னொன்று  என்னவென்றால் அந்த இசை தற்போது எனக்கு வெறும் டிஸ்கோ ஒலியாக கேட்கவில்லை. மாறாக என் குடும்ப உறுப்பினர் போல போனிஎம் முன்புபோலவே என் நெஞ்சத்துக்கு நெருக்கமாக ஒலித்தது.  டாடி கூல் பாடலின் முதல் இசையான இடம் வலம் நகர்ந்து செல்லும் கீபோர்டு இசை, அதை தொடரும் ட்ரம் பீட் என நான் கேட்ட அனைத்தும் என்னோடு உரையாடியது.

தொடர்ச்சியாக அந்த ஐந்து இசைத்தொகுப்புகளையும் கேட்ட பிறகு எனக்குப் பிடித்த  காமிக்ஸ் கதையொன்றை படித்த மகிழ்ச்சி என் மனதில் படர்ந்தது. யோசித்துப் பார்த்தாலோ இது உண்மைதான் என்று தோன்றுகிறது.



போனிஎம் கூட ஒரு காமிக்ஸ் போலவேதான். எத்தனை உவகையான நிகழ்வுகளை நான் வாழ்ந்திருக்கிறேன் இந்த இசை ஒலித்த நாட்களில். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து டேப் ரெக்கார்டரில் பஹாமா மாமா  கேட்ட நிசப்தமான கணங்கள், பள்ளிக்கு செல்வதை தாமதமாக்கிய ரஸ்புடின் அலறல், மதர்லெஸ் சைல்ட் என்ற பாட்டின் இடையே வரும் பிலீவிங் என்ற கோரஸை என் சகோதரிகள் திலீபன் (வீட்டின் முதல் பேரன்) என்று திரித்து அந்தப் பாடலை ரசித்தது, ஹேப்பி சாங் பாடலுக்கு என் அம்மா முதற்கொண்டு சிபாரிசு செய்தது, என் நண்பன் ஒரு திடீர் நாளில் என்னிடம்,"நானும் இனிமே உன்னை மாதிரி இங்க்லிஷ் பாட்டு கேக்கப்போறேன். எத முதல்ல கேக்கலாம்?" என சீரியஸாக தீர்மானம் எடுத்து "போனிஎம் கேளு" என்ற என் கட்டளைக்கிணங்க தொடர்ந்து அரைமணி கேட்டுவிட்டு அதன் பின் அந்தப் பேச்சையே கைவிட்டது, களிம்பாடி லூனா பாடலின் இடையில் அதிரும் சிந்தசைசர் மழை இரைச்சல் கேட்டு மற்ற நண்பர்கள் "ஏண்டா நம்ம ஆளுங்க இந்த மாதிரி மியூசிக்கெல்லாம் போடமாட்டேங்கிறாங்க?" என ஆதங்கப்பட்டது......

போனிஎம் ஒரு துடிப்பான இசைதான். வெறும் பீட்டுகள் மட்டும் கொண்ட டிஸ்கோ வகையை சேர்ந்ததுதான். ஆனால் நாற்பது வருடங்கள் கழிந்த பின்னரும், அந்த இசையில் இருக்கும் ஆன்மா இன்றைய பல நவீன மேற்கத்திய இசையில் கொஞ்சமும் இல்லை. இரைச்சலும், பேச்சுமாக வெறும் ஸ்ட்ரிம்மிங் கிடார் ஓசையுமாக இன்றைய ஆங்கில ராக் இசை பரிதாபமாக முகம் சிதைந்து வருகிறது. Pink Floyd ன் Comfortably Numb போன்ற மீண்டும் தோன்றாத அபூர்வங்கள் இனி வரப்போவதில்லை.




Going Back West என்ற போனிஎம் பாடலை மீண்டும் கேட்டபோது ஒரு கேரம் போர்ட், நான்கு நண்பர்கள் என்றிருந்த   அந்த எண்பத்து ஐந்தின் கோடை கால காலை மறுபடி துளிர்த்தது. 10000 லைட் இயர்ஸ் பாடல் அடுத்து ஆரம்பித்தது. ஆயிரம் முறை கேட்ட பாடல். பாடலின் இடையே சட்டென்று விழுந்த வார்தைகள் இம்முறை தீயின் துணுக்குகளாக சுரீரென சுட்டன.

"I feel like flow  in that clock at the wall,
God how I wish that this dream would go on....."








ஆம். சில சமயங்களில் நான் விரும்பிக் கேட்பதும் இதுவேதான்.

கலைந்து போகாதே என் கனவே!














18 comments:

  1. //இசை என்ற பெயரில் வெளிவரும் எல்லா அபத்தங்களையும் ஆபாசங்களையும் //

    இதை விட கனக்கச்சிதமாக யாராலும் சொல்ல முடியாது காரிகன். வர வர சில பாடல்களை கேட்பதற்கே நாராசமாக இருக்கிறது. ரசனை என்ற பெயரில் கீழ்த்தரமான ஓசையை தான் இசை என்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க குரு,

      நன்றி.

      இசை மாறிக்கொண்டே இருக்கும். நாமும் அப்படி மாறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது என் எண்ணம். நீங்கள் சொல்வது போல ரசனையின் தரம் கீழிறங்கி விட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இன்றைய இசை இன்றைய தலைமுறையினருக்கே அவ்வளவாக பிடிக்காமல் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

      Delete
  2. இன்றும் நான் கேட்டு மகிழும் போனி - எம் ஆல்பம் கிறிஸ்துமஸ் ஆல்பம் ஒன்றுதான். இந்த போனி - எம்மை என் பெரியம்மா மகன்தான் எனக்கு அறிமுகப்படுத்தினான் . உங்களைப் போலவே மேற்கத்திய இசையில் இன்னும் நாட்டத்தோடுதான் இருக்கிறான். ஒரு முறை அவனது அறைக்குச் சென்று இருந்தபோது ஒரு பீரோவை மூடியிருந்த போர்வையை விலக்கினேன் . அது பீரோ அல்ல....வரிசையாக பீரோ உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்ட ஆங்கில இசை சி டி க்கள் .

    பார்த்தவுடன் அதிர்ந்து போனேன். எனக்கு மேற்கத்திய இசை மீது லயிப்பு இல்லை. அதனால் அவனிடம் எல்லாவற்றையும் கேட்டிருக்கிறாயா என்று வினவியபோது பலமுறை கேட்டு மகிழ்ந்ததாக அவன் சொன்னான். ஆச்சரியம். ஆனால் உண்மை. fanatic in western music! ஒன்று புரிகிறது .

    நாம் எதில் மனம் லயித்துக் கிடந்திருந்து கனவு கண்டோமோ அந்த இசை கால காலத்திற்கும் நெஞ்சை விட்டு நீங்கி விடாது. நம்மைப் பொறுத்த வரை அதுதான் சிறந்த இசை. அடுத்தவர் மறுப்பதாலோ வெறுப்பதாலோ தூற்றுவதாலோ அது பொய்யாகிப் போய் விடாது. உங்களின் நினைவை துரத்தும் கனவுலக இசை மட்டுமே உண்மை. கலையாது. கலையாத அந்தக் கனவை கலையாத இளையராஜாவின் இசைக் கோர்வை போல அழகாக தொடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சால்ஸ்,

      பாராட்டுக்கு நன்றி.

      உங்கள் கஸின் பற்றிய நினைவலைகள் பிரமாதம். ஒருவேளை எனக்குத் தேவையான சிடிக்கள் அவரிடம் இருக்கலாம். இப்போது கூட ஆமேஸான் தளத்தில் ஒரு அரிய இசைத்தொகுப்பு ஒன்றை 2800 ரூபாய்க்கு பார்த்தேன். கொஞ்சம் விலை இறங்கியதும் வாங்கலாம் என்று கார்ட் டிலே வைத்திருக்கிறேன்.

      இதெல்லாம் சரி. இறுதியில் இரா இசை கோர்வை என்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றி விட்டீர்கள். பலே. இந்தப் பதிவில் கூட நான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் மைக்கல் ஜேக்சன் விசிறியாக இருந்த ஒரு மேல்தட்டு மாணவன் இரண்டு வருடத்தில் இளையராஜா பக்கம் போனது பற்றி எழுதியிருக்கிறேன். அவன் நண்பர்கள் வட்டம் அப்படி.

      Delete
  3. # ஒரேயொரு பாடல் எத்தனை நினைவு இழைகளை உயரூட்டி முடிந்துபோன அந்த கண நேரத்து இன்பத்தை மனதுக்குள் பிரதியெடுக்கிறது! #
    ஆத்மார்த்தமான வரிகள் .ஒருவரது
    மனதுக்குள் ஊடுருவி உயிரோடு கலந்த இசையை ( எத்தகைய இசையாயினும் ) யாராலும் மாற்ற முடியாதுதான் .பலதரப்பட்ட பாடல்களைக் கேட்க நேர்ந்தாலும் இதயம் நுழைந்து உயிரில் கலந்த இசையைக் காலத்தாலும் அழிக்க முடியாதுதான்.
    உங்களோடு கலந்த இசை தொடர்ந்து பயணிக்கட்டும்.கனவும் கலையாதிருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருள் ஜீவா,

      நன்றி.

      இசையோடு நாமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு கட்டத்தில் எனக்குத் தேவையானது இதுதான் என்ற தீர்மானிக்கும் மனமுதிர்ச்சி வரவேண்டும்.

      கனவாகிப் போய்விட்ட நிகழ்வுகள் என்றும் கலையாது.

      Delete
  4. \\ நியூ ஹாஸ்டலில் பார்த்தபோது,\\ Are you from MIT??

    ReplyDelete
  5. \\ நியூ ஹாஸ்டலில் பார்த்தபோது,\\ Are you from MIT??

    Anonymous & KAARIGAN T nos pl.
    41439

    ReplyDelete
    Replies
    1. I'm not from where you think I am. I think New Hostel is a common name for any hostel in any college.

      Delete
  6. இணையம் சார்ந்தே இப்போதெல்லாம் வேறு விதமான சில வேலைகளில் மூழ்கி விடுவதால் வலைப்பூக்களுக்கு வருவது குறைந்துபோய்விட்டது. இருந்தும் நீங்கள் எழுதி முடித்த பிப்ரவரியிலேயே பார்த்துவிட்டேன் இந்தப் பதிவை. பிறகு படிக்கலாம் என்று தள்ளிப் போட்டதில் இத்தனை நாட்கள் ஆகிவிட்டன. போனி எம்மின் இசை அனுபவங்கள் எல்லாரையுமே கொஞ்சம் பின்நோக்கிப் பார்க்கத்தான் வைத்திருக்கும். ஏனெனில் ஆங்கில இசைபற்றி அத்தனை தூரம் அறிந்திருக்காதவர்கள்கூட அறிந்த ஒன்று போனிஎம். போனிஎம்மின் முதல் கேசட்டுக்குப் பின்னர் வெளிவந்த அத்தனைக் கேசட்டுக்களையும் கேட்டிருக்கிறேன் பலமுறை. கொஞ்சம் மாற்றி பாடப்பட்ட கிறிஸ்துமஸ் பாடல்கள்கூட ஜிம் ரீவ்ஸ் பாடல்களில் மட்டுமே மூழ்கிக் கிடந்த நிறையப்பேரை மடை மாற்றியிருக்கின்றன என்பதை அறிவேன்.
    அந்தக் குழுவுக்கு இசை பற்றி அதிகம் தெரிந்திருக்காதவர்களைக்கூட வசியம் செய்யும் மந்திரம் இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. உங்கள் வார்த்தைகளில் அழகான இசையனுபவம் அலை அலையாய் மிதந்து செல்வதை ரசிக்க முடிந்தது.
    சார்லஸ் தன்னுடைய அனுபவத்தையும் நேர்மையான முறையில் சொல்ல முனைந்தவர் ஏனோ தெரியவில்லை திடீரென்று அந்தர் பல்டியடித்து விழுந்திருக்கிறார். எந்தக் குட்டையில் வேண்டுமானாலும் மீன் பிடிக்கப்போகலாம்தான். ஆனால் தான் பிடிக்க விரும்பிய மீனைத்தான் பிடிக்கவேண்டும் என்று எண்ணுவதுதான் அபத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமுதவன்,

      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      நானும் இணையம் வருவது தற்போது சற்று குறைந்திருக்கிறது. உங்களுக்கு இருக்கும் திரளான பணிகள் மத்தியில் பின்னூட்டதிற்கான நேரம் அமைவது சற்று சிரமம்தான்.

      நீங்கள் குறிப்பிடுவது போல ஆங்கில இசை பற்றி அறியாதவர்கள் கூட போனிஎம் பாடல்கள் கேட்டிருப்பார்கள். மேல்தட்டு மக்கள் போன்று பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ் வகை இசை கேட்காது ஒரு சிறிய நகரத்தின் வாழ்ந்த சிறுவனின் ரசனைக்கேற்ற போனிஎம் மூலம் நான் ஆங்கில இசைக்கு அறிமுகமானேன். கல்லூரி நாட்களில் அது குறித்து கொஞ்சம் அவமானம் இருந்தது. இப்போது திரும்பிப் பார்க்கையில் நான் ரசித்தது ஒன்றும் மிக மோசமானதில்லை என்று உணர்கிறேன். Children Of Paradise பாடலை கேட்கும் போது இது இன்னும் நன்றாக புரிகிறது.

      சால்ஸ் நன்றாக பின்னூட்டம் எழுத்தக் கூடியவர். அவர் அபிமானத்திற்குரியவரை இங்கே இழுத்துக் கொண்டு வராமல் இருந்திருந்தால் நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்.

      Delete
  7. http://www.tamilcinetalk.com/isaignani-sent-legal-notice-to-spb-news/

    ReplyDelete
  8. Anonymous
    \\http://www.tamilcinetalk.com/isaignani-sent-legal-notice-to-spb-news/\\
    அதுதான், எத்தனைப் பெரிய கொம்பனாக இருந்தாலும் வெறும் திறமையை மட்டுமே பார்த்து நாம் தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடிக் கொண்டு இருக்கக் கூடாது. அவர்களின் வேறு குணங்களையும் பார்க்க வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் 'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அமுதவன் சார்

      தேசியக் கவி பாரதி , தலை சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் இருவருக்கும் ஒரே மாதிரியான கெட்ட பழக்கம் உண்டு என்பதை பலரும் அறிவர். அது அவர்களின் குணங்களைத்தான் காட்டுகிறது . ஆனாலும் அவர்கள் இன்னும் பாராட்டப்படுகிறார்கள்; கொண்டாடப் படுகிறார்கள். அவர்களை நாம் இன்றும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லையா!?

      Delete
    2. அமுதவன் அவர்களே,
      #எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் வெறும் திறமையை மட்டுமே பார்த்து நாம் தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடிக் கொண்டிருக்கக் கூடாது.அவர்களின் வேறு குணங்களையும் பார்க்க வேண்டும் #
      அப்படியெனில் தமிழகத்தின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி பெரியார் ,கவிப்பேரரசு கண்ணதாசன்,செவாலியே சிவாஜி,எம்.ஜி.ஆர்.மற்றும் இன்ன பிற தலைவர்கள்,அறிஞர்கள் போற்றுதலுக்கு உரியவர்களல்ல என்று சொல்ல வருகிறீர்களா? நமக்கு வேண்டியவரகளெனில் அவர்களது சொந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ளக் கூடாது.வேண்டாதவரெனில் திறமை தவிர்த்து இத்யாதிகளை விமரசிப்பது.நல்லாயிருக்கே உங்கள் நியாயம்.

      Delete
  9. சார்லஸ் மற்றும் அருள் ஜீவா உங்களின் கோபம் புரிகிறது. உங்களின் தர்க்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. சார்லஸ் சொல்லியிருக்கும் பாரதி, ஜெயகாந்தன் போன்றவர்களும் சரி; அருள்ஜீவா சொல்லியிருக்கும் பெரியார், கண்ணதாசன்,சிவாஜி, எம்ஜிஆர் இவர்களிடத்திலெல்லாம் சில பொதுவான பலவீனங்கள் இருந்திருக்கலாம். அதில் ஜெயகாந்தனைத் தவிர மற்ற யாருமே மக்களிடமோ அல்லது மக்களைத் தொடுகின்ற எந்த ஊடகத்திடமோ அதனைக் காட்டியதில்லை. சிவாஜி தன்னுடைய திறமையைப் பற்றிய அகங்காரத்தை என்றுமே தன்னுடைய தலைக்கு ஏற்றிக்கொண்டவரல்ல.(சிவாஜி பற்றிக் கேட்டிருப்பதால் சொல்கிறேன். சில சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த எத்தனையோ பேர் தமக்கு கதாநாயகன் வேடம் கிடைத்ததும் ஆசீர் வாங்க அவரிடம் சென்றிருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் 'எனக்கு என்னடா திறமையிருக்கு? என்னமோ ஆண்டவன் கொடுத்திருக்கான் சும்மா அப்படி இப்படி நடிச்சுட்டிருக்கேன். நீ எல்லாம் பெரிய நடிகன். நான் உங்கிட்டயிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருப்பது எத்தனையோ இருக்கு' என்றெல்லாம் சொல்லியிருக்கும் செய்திகள் இருக்கின்றன. கடைசிப் படம் வரைக்கும் டைரக்டர் தயங்கினால்கூட 'சும்மா சொல்லுப்பா. உனக்கு எப்படி வேணுமோ அதைச் சொல்லு. அப்படி நடிக்க முடியுமான்னு பார்க்கிறேன்.சிவாஜி பெரிய நடிகன் எப்படிச் சொல்றதுன்னெல்லாம் தயங்காதே' என்றெல்லாம் சொல்லியிருக்கும் செய்திகள் இறக்கை கட்டுகின்றன. அவருடைய பிரதாபங்கள் எதுவுமே பேசப்படாமல் வேறு சில நெகடிவ்வான விஷயங்கள் 'மட்டுமே' அவரைச் சார்ந்து பேசப்பட்டிருப்பதால் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டு விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்) பெரியார் எத்தனையோ விஷயங்களில் முரட்டுத் தனமான கருத்தைச் சொல்லியிருப்பவர் என்றபோதும் வயதில் மிகச்சிறியவர் அவரை சந்திக்கச் சென்றாலும் அந்தத் தள்ளாத வயதிலும் எழுந்து நின்று வரவேற்கும் அற்புதமான குணத்திற்குச் சொந்தக்காரர்.அம்மாதிரியான குணநலன்கள் ஏதாவது நீங்கள் ஆராதிக்கும் பெரிய மனிதரிடம் இருக்கிறதா என்பதைச் சொல்லுங்கள். கண்ணதாசன் தனிப்பட்ட முறையில் நிறைய பலவீனங்களுக்கு அடிமையானவராக இருந்தபோதிலும் பொதுவில் எப்படிப் பழகுவார் என்பதற்கு சான்றுகள் நிறைய இருக்கின்றன. எல்லாரையும் மதிக்கும் பண்பு அவரிடம் நிறையவே உண்டு. பொதுவாக இம்மாதிரியான விஷயங்களில் மிகமிக மோசமான ஒரு பெரும்புள்ளியை ஆதரிப்பதற்காக மற்ற அத்தனைப் பெரிய மனிதர்களையும் இழுத்து அவர்களை அவமானப்படுத்தும் வேலைகளில் தயவு செய்து ஈடுபடாதீர்கள். மற்றபடி நீங்கள் இருவருமே குறிப்பிட்டிருக்கும் பெரியவர்கள் எல்லாரிடத்திலும் மனிதத்தன்மை மிக அதிகமாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்வது நலம்.

    ReplyDelete
    Replies
    1. ------பொதுவாக இம்மாதிரியான விஷயங்களில் மிகமிக மோசமான ஒரு பெரும்புள்ளியை ஆதரிப்பதற்காக மற்ற அத்தனைப் பெரிய மனிதர்களையும் இழுத்து அவர்களை அவமானப்படுத்தும் வேலைகளில் தயவு செய்து ஈடுபடாதீர்கள். -----

      அமுதவன் ஸார்,

      கண்ணியமாக தரமான கருத்தை நியாயத்துடன் தெரிவித்திருக்கிறீர்கள். நூற்றுக்கு நூறு சரி.

      இது போன்று காலமாகிவிட்ட இசை மேதைகள், அறிஞர்கள், பெரிய சகாப்தம் படைத்தவர்கள் போன்றவர்களையும் இவர்கள் தங்களது அற்ப நோக்கத்திற்காக வெகு சுலபமாக ஒரே தராசில் வைத்து நகையாடுவது கடைந்தெடுத்த சிறுபிள்ளைத்தனம். யாரை யாருடன் ஒப்பிடுவது என்ற அறிவு முதிர்ச்சி அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்பதன் வெளிப்பாடே இந்த வகை ஒப்பீடல் என்று தோன்றுகிறது. இயலாமையின் இன்னொரு முகம்.

      Delete